Monday, 25 August 2014

கேள்விகள் நிறைய...............

மனசு வலிக்கிறது.....
கேள்விகள் பதில்கள் தெரியாமல் தவிக்கின்றன......
இரண்டு நாட்களுக்கு முன்...... மழை அடித்து பெய்துக் கொண்டிருந்தது.
பள்ளி நேரம் முடிந்து வெகு நேரமாகியும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை அழைத்துச் செல்ல அவன் தாய் வரவில்லை....
பையன் அழுதபடி..... எங்களால் சமாதானம் செய்யமுடியவில்லை.. பால், பிஸ்கட், எதுவும் வாங்க மறுத்துவிட்டான்..
வீட்டின் செல்பேசி இரண்டும் அணைக்கப் பட்டிருக்க... என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்..
எங்களுக்கும் நேரமாகிக் கொண்டே இருந்தது.
காலையில் சரியான நேரத்திற்கு குழந்தையை பள்ளிக்கு அனுப்பி, மதியம் உணவு கொண்டு வந்து கொடுத்து, மாலையும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துவிடும் அவனது அம்மாவிற்கு இன்று என்னவாயிற்று?
கணவர், இந்தியாவின் எல்லைக்கோட்டில் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்க, ஆறு வயதிலும், மூன்று வயதிலும் இரண்டு மகன்களையும், தனியாய் இங்கே வளர்த்துக் கொண்டிருந்தாள். குழந்தைகள் இருவரும் சரியான சுட்டி... படிப்பிலும், விளையாட்டிலும், தனித்திறமைகளிலும் தங்களை நிருபித்துக் கொண்டிருந்தனர்.
இருபது வயதே  நிரம்பிய பெண் , தனி ஆளாய் குழந்தைகளை மிகச் சரியாய், திறமையாய் வளர்த்து வருவதில் எங்களுக்கும் ஆச்சரியமான விஷயங்களில் ஒன்றாக இருக்கும்.... எந்த சலுகைக்காகவும், அவளது குழந்தைகளுக்காகவும் அவள் எங்களிடம் வந்து நின்றதே இல்லை. பாராட்ட மட்டுமே சந்தித்துக் கொள்வோம்...... அப்போது எங்களுக்கு உறுத்தும் ஒரே விஷயமாக இருந்தது அவளுக்கும் அவளது கணவருக்கும் உள்ள 15 வயது வித்தியாசம் தான்.
சரி விஷயத்திற்கு வருவோம்....
இன்னும் அந்த குழந்தையின் அழுகை நிற்கவில்லை.... எங்கேயாவது வெளியே சென்று, மழையில் மாட்டிக் கொண்டுவிட்டாளோ? மறுபடியும் போனில் கூப்பிட்டோம்..... போன் அணைக்கப் பட்டிருந்தது..... எங்கள் பள்ளியில் படிக்கும் அவனது வீட்டருகே இருக்கும் மற்றொரு மாணவியின் எண்ணைத் தேடி , அழைத்து, விஷயத்தை சொன்னோம். அவர், அவனது வீடு பூட்டி இருக்கிறது என்றும், தான் வந்து அழைத்துப் போவதாகவும் சொன்னப் பிறகு தான் எங்களுக்கு நிம்மதியாய் இருந்தது. 
அவனை அவரிடம் ஒப்படைத்து விட்டு நாங்கள் எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்..
மறு நாள் காலை பள்ளிக்குச் சென்றால், பெரிய கதை ஒன்று முளைத்திருந்தது.
அந்த பெண் தன் பக்கத்து வீட்டு இளைஞனோடு எங்கோ போய் விட்டாள்....
கொடுமை என்னவென்றால், தன் இரு குழந்தைகளை பற்றியும் கவலைப்படாமல் , தெருவில் விட்டுவிட்டு ஓடிவிட்டாள்.. தகவல் சொல்லப்பட்டு, கிராமத்தில் இருக்கும் அவளது மாமியார் வரும் வரை அம்மாவை காணாமல், அழும் குழந்தைகளை, தெருக்காரர்கள் இரவு முழுவதும் வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டு இருந்திருக்கின்றனர்.  இராணுவத்தில் இருக்கும் அவளது கணவனுக்கு தகவல் அளித்தததோடு, காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அவளை மாலைக்குள் கண்டுப்பிடித்து, காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர்.
அவள், தன்னை விட அதிக வயதான , சந்தேகப்பிராணியான தன் கணவரும்,  அவரது இரண்டு குழந்தைகளும் வேண்டாம் என்றும், தான் அந்த இளைஞனோடு தான், தன் புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போவதாக பிடிவாதமாய் கூறிக் கொண்டிருக்கிறாளாம்... காவல் துறையும், உறவினரும், அவளுடைய கணவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அவளது குழந்தைகள் இருவரும், விவரம் தெரியாமல் அம்மாவைத் தேடி அழுதவண்ணம் இருக்கின்றனர். பள்ளிக்கு வரவில்லை. சாப்பிடவும் பிடிவாதமாய் மறுத்து வருகின்றனராம். அம்மா தங்களை பார்க்க கூட விரும்பவில்லை என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
இரண்டு குழந்தைகளுக்கு சரியான அம்மாவாக இருந்து வந்த அந்த பெண், இப்படி செய்ததது யார் குற்றம்? யாரை சொல்வது?
பணம் காசுக்கு ஆசைப்பட்டு, அதிக வயது வித்தியாசத்தில் தன் ஒரே மகளை திருமணம் செய்துக் கொடுத்த அந்த பெண்ணின் தாயின் குற்றமா?
தன்னை விட15 வயது சிறிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு, எங்கோ இருந்துக் கொண்டு, அவளை எல்லாவற்றிக்கும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய அவளது கணவனின் தவறா?   
இரண்டு குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண்ணின் மனதை மாற்றி, தன் குடும்பத்தையும் ஏமாற்றிவிட்டு அந்தப் பெண்ணோடு வாழ திட்டமிட்ட அந்த இளைஞனின் குற்றமா?
எப்போதாவது பத்து நாட்கள் வீடு வரும் தன் கணவனின் கொடுமைகளை தாங்கிக் கொள்ளமுடியாமல், தான் பெற்ற குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு, இப்போது பார்க்கக் கூட விரும்பாமல் உதறி தள்ளிவிட்டு, தன் புதிய காதலனோடு வாழ இருக்கும் தாயின் குற்றமா”?
எந்த விவரமும் புரியாமல், தாயை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் அந்த குழந்தைகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது அந்தக் குடும்பம்?
அந்தப் பெண்ணால் தன் குழந்தைகளை மறந்து, தன் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ள முடியுமா? அவளோடு வந்திருக்கும் அந்த இளைஞனுடன் அவள் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறுமா?
திருமணமாகாத தன் ஒரே மகன் இப்படி செய்துவிட்டானென்று அவனின் வயதான பெற்றோரின் தவிப்பை யார் புரிந்துக் கொள்ளப் போகிறார்கள்?
கணவனையும், குழந்தைகளையும்  உதறிவிட்டு, புதிய வாழ்க்கையைத் தேடிக் கொண்ட அந்தப் பெண்ணை நிம்மதியாய் வாழவிடுமா இந்தச் சமூகம்?
எல்லா பஞ்சாயத்தும் முடிந்து, அந்த பெண் தான் விரும்பிய ஆணோடு வாழத் தொடங்கலாம்.....
அந்த ஆணும், அவனது குடும்பமும் அவளை ஏற்றுக் கொண்டு வாழலாம்...
அவள் கணவணும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, சந்தேகப்பட்டுக் கொண்டு இருக்கலாம். 
இந்த சமூகமும் இவற்றையெல்லாம் மறந்து , அடுத்த கதையை அசைப் போட ஆரம்பிக்கும்.....
ஒன்றும் அறியா அந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை?
அவர்களது இருப்பிடம், உணவு, அன்பு, அரவணைப்பு... இப்படி..... இதெல்லாம் தொலைத்து.... தங்கள் எதிர்காலத்திற்கு வித்தான கல்வியையும் தொலைத்து விடப் போகிறார்கள்.
தாயன்பும், தந்தையின் அரவணைப்பும், இருந்தும் இல்லாத இந்த குழந்தைகளுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?
   

Saturday, 22 February 2014

event management

எங்கள் பள்ளி ஆண்டு விழாவினை குழந்தைகள் சிறப்பாக நடத்தி  விட்டனர்.

ஆம். வழக்கம் போல ஆசிரியர்கள்   நாங்கள் ஆச்சரியத்தில் வாய் திறந்து
முழித்துக் கொண்டிருந்தோம்.

கலைநிகழ்சசி க்கான பயற்சி வெறும்  7 நாட்கள் மட்டுமே கொடுத்தோம்.

விழாவின் முதல் நாள் வரை மேடையில் மாணவர்கள் சொதப்பிக் கொண்டிருந்தனர் .

ஆனால் விழா  அன்று எல்லோரையும் அசத்திவிட்டனர்.

ரோபோ நடனத்தில் பெரிய மாணவர்கள் அசத்தினர் என்றால் சிறிய குழந்தைகள் பட்டாம் பூச்சிகளாய் மேடையில் பறந்து ஆச்சரியப் படுத்தி விட்டனர்.  
இதெல்லாம் விட மாணவர்கள் மேடையை கையாண்ட விதம் என்னை யோசிக்க வைத்து விட்டது.

 மேடையில் ஆடும் போது உடை தடுக்கி கீழே விழ இருந்த சக மாணவியை கைப் பிடித்து தொடர்ந்து ஆட   வைத்தது ; 

ஆசிரியர் சரியாக உடை மாட்டி விடாமல் கீழே நழுவி நழுவி வந்துக் கொண்டிருந்த தன் ஆடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டே  கடைசி வரை  ஆடி முடித்தது;

இப்படி ஏராளமாய்   குழப்பங்களை மேடைக்கு வெளியே    பார்த்துத் தவித்துக்    கொண்டிருந்த எங்களுக்கு , அழாமல் , தவித்து நிற்காமல் , இயல்பாய் அழகாய் மேடை மேலாண்மையை கற்றுக் கொடுத்து விட்டனர் குழந்தைகள் .


Sunday, 26 January 2014

We are getting ready for our school Annual Day on Feb 8th........ Children are creators..... We are excited with our students........ Welcome to our school annual day.....




Thursday, 16 January 2014

5 நாட்கள் பொங்கல் விழா விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்கிறது.

விடுமுறையில் வீட்டு வேலைகள் நெரித்தாலும் வீட்டிலிருப்பது ஒரு தனி  சுகம் தான்.

நாளை ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு  எடுத்தால் சனி    ஞாயிறு  சேர்ந்து மேலும் மூன்று நாட்கள் வீட்டில் இருக்கலாம்.......

ஆசையாக இருந்தது......

ஆனால் பள்ளி முதல்வராக இருந்து விடுப்பு எடுத்தல் தவறு என்று ன்  கடமை உணர்வு அ்றிவுறித்தினாலும்  , மனசு அடம் பிடித்தது......

யோசித்தபடியே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.  என் செல் பேசி அழைத்தது. இந்த நேரத்தில் யார் அழைப்பது என்று யோசித்தபடியே எடுத்தேன்.

'ஹலோ  மேடம்' , என்று மழலைக் குரல்........

'யாருமா ?' என்றேன்.
'
நான் தான் ........ first  std  படிக்கிறேன்.  எனக்கு நாளைக்கு பர்த்டே ..... உங்களுக்கு ஒரு book வாங்கி வச்சிருக்கேன், நிறைய சாக்லேட் வச்சிருக்கேன் ....
..[எங்கள் பள்ளியில் குழந்தைகள் தங்கள் பிறந்த  நாள்  அன்று  பள்ளிக்கு ஏதாவது ஒரு புத்தகமோ அல்லது ஒரு  செடியோ அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் ]  லீவு போடாம வந்திடுங்க மேடம் , குட் நைட்' ...... என்று போனை கட் செயதான்.

லீவு போடும் எண்ணத்தை கைவிட்டு ,    குழந்தையின் அன்பை நினைத்து , மகிழ்ச்சியாய்  இந்த விஷயத்தை பதிவு செய்து விட்டு  உறங்கச்  செல்கிறேன் .....
 இரவு வணக்கம்......   



   

Monday, 13 January 2014

தை பொறந்தா வழி  பொறக்கும் - என்ற                                                                                           தெம்பிலே  
கையலுக்க பாடுபட்டோம் மண்ணை நம்பியே !

 நம் உழவிற்கு உறுதுணையாய் இருக்கும் மண்,  மழை, சூரியன் , ஏர் ,  மாடு என்று எல்லாவற்றையும் நன்றியோடு வணங்கும் நாளாக தை மாதத்  திருநாள் கொண்டாடப் படுகிறது .

ஆனால் மாட்டோடு மாடாக உழைத்துக் கொண்டிருக்கும்  உழவர்களை  வணங்கும் விதமாய் எங்கள்   பள்ளியில்  பொங்கலிட்டு,
 உழவர்களின் வாழ்வு நலமும் , உடல் நலமும் சிறக்க  வேண்டுதலோடு   பொங்கல் விழாவினை   இனிதே முடித்தோம்.

Saturday, 11 January 2014

pongal vizha

நேற்று எங்கள் பள்ளியில் பொங்கல் விழா  கொண்டாடினோம் ......

பள்ளி குழந்தைகள் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப அரிசி , வெல்லம் , நெய் , பாசிபருப்பு , ஏலக்காய், முந்திரி கொண்டு வந்து குவித்து விட்டனர்.    ஆசிரியர்களின் பங்காக நாங்கள் பொங்கல் பொங்குவதற்கு பாத்திரங்களும் ,  விறகும் வாங்கி  பள்ளி மைதானத்தில்  பொங்கல் வைத்தோம் .

காலை பத்து  மணிக்கு துவங்கிய வேலை மதியம்   ஒரு மணியளவில் முடிந்தது.

 குழந்தைகளோடு சேர்ந்து  பொங்கல் சமைத்து சாப்பிட்டது ரொம்ப  மகிழ்ச்சியாக இருந்தது.

 குழந்தைகள் யாவரும் தமிழ்நாட்டு உடையான பாவாடை சட்டை , வேஷ்டி சட்டையுடன் வந்து ஜமாய்த்து விட்டனர்.

பள்ளி முழுதும் வண்ணத்துப் பூச்சிகளாய்  பறந்துக் கொண்டிருந்தனர் . தங்கள் வீட்டு விழா போல் பெரிய மனுஷத் தோரணையில் வேலைகளை    கவனித்தனர்.

 குழந்தைகள் கொடுத்த ஊக்கமும் மகிழ்ச்சியும் எங்களுக்கு  500  பேருக்கு சமைத்ததில் சுமையே தெரியவில்லை.

அடுப்பு பற்ற வைத்ததிலிருந்து,  கடைசியில் பாத்திரங்கள் கழுவும் வரை பொறுப்பாய் ஒரு சில மாணவர்கள் எங்களோடு துணை நின்றனர்.

ஆசிரியர்கள் அடுப்பருகே நின்றிருந்ததால் ஒரு சில  மாணவர்கள் சிறிய குழந்தைகளை பத்திரமாய் , அமைதியாய் பார்த்துக் கொண்டனர்.

 இந்த பொறுப்புகளை எல்லாம் அவர்களே  எடுத்துக் கொண்டு  செயல்பட்டது   என்னை ஆச்சரியப் படுத்தியது.

ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கு நாம் நல்ல வழிக்காட்டியாக  இருந்தால் மட்டும்  போதும் என்று அவர்கள் நிரூபித்து விடுகின்றனர்.

 எல்லோரும் எல்லா வேலைகளை பகிர்ந்துக் கொண்டால் எந்த வேலையும் எளிது என்று குழந்தைகள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் நேற்று.

பொங்கல் கொண்டாடும் இந்த நாளில்  மீண்டும் ஒரு  பாடம் கற்றுக் கொடுத்த  குழந்தைகளுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்