Saturday, 29 June 2013

mugamoodi

வார  நாட்களில் எல்லோரும் வேலைக்குப்    போய்விடுவதால்  சனி ஞாயிறு  இரண்டு நாட்கள் எங்கள் வீடு  அமர்களப்படும்.   எங்கள் எதிர்வீட்டு சுட்டிப் பையன் கெபினின் வருகையால் .

மூன்று வயது நிரம்பிய அவனின் பேச்சு, குழந்தைத்தனமும் , புத்திசாலித்தனமும்  நிறைந்து இருக்கும். அவனின்   பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் . மூன்று வயது வரை க்ரஷில் இருந்ததால் அவன் யாரிடமும் எளிதாய் பழகி விடுகிறான்.

அவனிடம் பேசிக் கொண்டிருந்தால் ஒரு நளைக்கு 24 மணி நேரம் போதாது.

அவன்  கேட்கும்  கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது. அவன் நம் பதிலில் திருப்திப்படும் வரை நம்மை விடமாட்டான் . வேறு எந்த சேட்டையும் அதிகம்  செய்ய மாட்டான் .

படிக்கும் வயது வந்ததால் அவனை ஒரு தனியார் பள்ளியில் KG சேர்த்திருக்கிறார்கள். பதினைந்து நாட்களாய் பள்ளிக்கு போய் வருகிறான் .

இன்று சனிகிழமை.

அவன் வரவை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் .  இன்னும் அவன் வரவில்லை.
 பள்ளி போக துவங்கியது முதல் அவனது சிரிப்பும் , பேச்சும் தொலைந்துப் போனது.

தினந்தோறும் பள்ளிக்கு கிளம்புகையில்  அவனை 'எங்கே சிரிம்மா ' என்றால்
அவன் 'நான் சிரிக்கிறேன் தான் மம்மி ஆனால் அழுகை தான் வருது என்கிறானாம்' . மேலும் அவன் பேசுவதே இல்லை.

எதையும் சமாளித்து,  எதற்கும் அழாத குழந்தையின் வீட்டில்  இப்போதெல்லாம் அவனின் அழுகை சத்தமே  அதிகமாய் கேட்கிறது ...

ஒரு பதினைந்து நாள் பள்ளி வாழ்க்கை அவனது  இயல்புத் தன்மையை புரட்டிப் போட்டு   விட்டதா?  குழந்தைத் தன்மையை திருடி எடுத்துக் கொண்டதா பள்ளி ?

இந்த ப்த்னைந்து நாட்களில் அவன் பள்ளியில் கற்றுக் கொண்ட பாடம் ...
 
தன ஒரு கையை  மடக்கி வைத்து, ஒரு கையின் ஆட்காட்டி விரலை உதட்டில் வைப்பது ........  

 'ஷ்' என்கிற குரல்  எங்கிருந்து ,எதற்காக வருகிறது என்று அவன் யோசிக்காமல் தன்னையும் அறியாமல் தன ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்துக்  கொண்டு  என்னத்தை பெரியதாய் சாதித்து விடுவான் , இல்லை நாம்  என்ன   சாதித்து விட்டோம்  என்று நினைக்கிறோம் ?

குழந்தைகளின் மனதை திருடும்  இன்றைய   கல்விச் சூழலை குழந்தைகளுக்கான் சூழலாக எப்படி  மாற்றப்   போகிறோம்?
    

1 comment:

  1. குழைந்தைப்பருவத்தைதொலைக்ப்பார்கிறார்கள்

    ReplyDelete